tamilnadu

img

காலத்தை வென்றவர்கள் : பாட்டுக்கோட்டையாய் பட்டுக்கோட்டை...

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் உள்ள செங்கப்படுத்தான்காடு என்ற கிராமத்தில் 1930ஆம் ஆண்டு ஏப்ரல் 13ல் பூத்தசெம்மலர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்.

தனது இளமைக் காலத்திலேயே பலரும், கேட்டுக் கிறுகிறுக்கும்படி பாட்டுக்கட்டிப் பாடுவார். தலைமறைவு வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்த கம்யூனிஸ்ட் தலைவர்களுக்கு உண்ண உணவு கொண்டு போய்க் கொடுப்பார்; ரகசியக் கடிதங்களை உரியவர்களிடம் சேர்ப்பார்; இயக்கப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வார்.

பாண்டிச்சேரி பொதுவுடமைத் தலைவர் வ.சுப்பையா மூலம் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனை நேரில் சந்தித்தார். உணர்ச்சிப் பெருக்கோடு கல்யாணசுந்தரத்தைத் தழுவி அணைத்துக் கொண்டார் பாவேந்தர். “நான் எழுதும் பாடல்களைப் படி எடுப்பதும், குயில் ஏட்டைப் பார்த்துக் கொள்வதும் உனதுபணிகள்! சம்மதம் தானே!” என்றார். அதனைப் பெறற்கரிய பெரும் பேறாகக் கருதினார் கல்யாணசுந்தரம். பகலில் இல்லத்தில் பணி, இரவில் கட்சி அலுவலகத்தில் கண்ணயர்வு! கவிதையும்-கட்சிப் பணியும் அவருக்கு இரு கண்களாயின.

சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம் 1955-ஆம்ஆண்டு தயாரித்த மகேஸ்வரி என்ற திரைப்படத்தில் கல்யாண சுந்தரத்தின் பாடல்கள் முதன் முதலாக இடம் பெற்றன.“பாசவலை” என்ற திரைப்படத்திற்கு இவர் எழுதியபாடல்கள் திரை உலகில் புகழைப் பெற்றுத் தந்தது.குல தெய்வம், ரங்கோன் ராதா, சக்கரவர்த்தி திருமகள், அலாவுதீனும் அற்புத விளக்கும், புதையல், நாடோடி மன்னன், உத்தமபுத்திரன், அன்பு எங்கே, திருமணம், பதிபக்தி, தங்கப் பதுமை, கல்யாணப்பரிசு, நல்ல தீர்ப்பு உட்பட 57 திரைப்படங்களுக்கு 182 திரை இசைப் பாடல்களை எழுதியுள்ளார் கல்யாண சுந்தரம்.

புரட்சிக் கவிஞர் பாவேந்தர் தலைமையில் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்திற்கும் கௌரவாம்பாளுக்கும் திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.பாமரரும் புரிந்து கொள்ளும் வகையில் பொதுவுடைமைச் சிந்தனைகளையும், சமூக மாற்றத்திற்கான கருத்துக்களையும், தனது பாடல்களில், பொதிந்து வைத்து கவித்துவத்தோடு வெளிப்படுத்தியுள்ளார். அவர் பாடல்கள் நிலைத்து நிற்பதற்குக் காரணம் அவற்றின் எளிமையும், இனிமையும், கருத்தும் செறிவும் ஆகும்.விவசாயிகளின் வாழ்க்கையை நாடோடி மன்னன் திரைப்படத்தில்,

“காடு வெளஞ்சென்ன மச்சான்
நமக்கு கையும் காலும் தானே மிச்சம்”

என்றும், மூட நம்பிக்கைகளை தங்கப் பதுமை திரைப்படத்திலும் அம்பலப்படுத்தியுள்ளார்.

மேலும், அரசிளங்குமரி திரைப்படத்தில் வரும் கீழ்க் குறித்த பாடல் வரிகள் பாரதியின் நெஞ்சு பொறுக்குதில்லையே-வை நினைவூட்டும்.

“வேப்பமர உச்சியில் நின்னு
பேயொன்னு ஆடுதுன்னு
விளையாடப் போகும்போது
சொல்லிவைப்பாங்க – உன்
வீரத்தைக் கொளுந்திலேயே
கிள்ளி வைப்பாங்க...”

விதியை நம்பி வெம்பி வாழ்பவர்களைப் பார்த்து, உழைப்பின் மேன்மையை இவ்வாறு கூறுகிறார்.

நாட்டில் தனியுடைமைக் கொடுமைகள் ஒழிந்து பொதுவுடமை மலர்ந்திடப் போராட வேண்டும் என்ற கருத்தை இப்படிப் பாடிக்காட்டுகிறார்!

“தனியுடைமைக் கொடுமைகள் தீரத்
தொண்டு செய்யடா! நீ
தொண்டு செய்யடா!
தானா எல்லாம் மாறும் என்பது
பழைய பொய்யடா!– எல்லாம்
பழைய பொய்யடா!”

கைம்பெண்களின் நிலைமையினையும், சமூகம் கொண்டுள்ள மோசமான பார்வையையும் இங்கு அம்பலப்படுத்துகிறார்.தொழிற்சாலை கதவடைப்பைக் கண்டித்து இரும்புத்திரை படத்தில் இவ்வாறு எழுதினார்:

“பட்டினிக்கும் அஞ்சிடோம்!
நெஞ்சினைப் பிளந்த போதும்
நீதி கேட்க அஞ்சிடோம்!
நேர்மையற்ற பேர்களின்
கால்களை வணங்கிடோம்!.”

ஆளும் அரசியல்வாதிகளின் போலி வாக்குறுதிகளையும், மக்களின் வறுமையையும்,

“தேனாறு பாயுது! செங்கதிர் சாயுது!
ஆனாலும் மக்கள் வயிறு காயுது”

என்ற பாடல் வரிகள் மூலம் காட்சியாக்குகிறார்.குறுகிய காலமே வாழ்ந்தாலும் தன் கவிதை வாளால், திரை உலகை ஆண்ட முடி சூடாமன்னன் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். மக்களுக்காகச் சிந்தித்த மகத்தான அக்கவிஞன், தமது 29 வயதிலேயேகாலமானார். ஆனாலும் பட்டிதொட்டி முதல் பட்டணக்கரை வரை இப்பாருலகு எங்கும், அவரது பாடல்வரிகள் மக்கள் நெஞ்சில் நிலைத்து நிற்பவை! என்றும்சாகாதவை.அவரது படைப்புகள் யாவும் அவரைப் போலவே எளிமையானவை. இனிமையானவை. திரைப்படங்களுக்குப் பாடல்கள் எழுதினாலும் இறுதி வரை சோரம் போகாத கவிஞராகத் திகழ்ந்தார். எம்.ஜி. ஆர். முதல்வர் ஆனதும் தமது நாற்காலியின்  ஒரு கால் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் கால் என்றாராம். அந்தளவிற்கு பொதுவுடமைத் தத்துவப்பாடல்கள் எம்.ஜி.ஆர்  நடித்த படங்களில் இடம் பெற்றதற்கு கவிஞரே காரணம்.

“கலை மக்களுக்குச் சொந்தமானது. அதன் வேர்வஞ்சிக்கப்பட்ட பெரும்பாலான உழைப்பாளி மக்களுக்கு இடையில் படர்ந்திருக்க வேண்டும். அது அவர்களை ஒன்றுபடுத்தி அவர் தம் உணர்ச்சிகளையும், எண்ணங்களையும் நிறைவேறச் செய்வதாய், அவர் தம் கலையுணர்வைத் தூண்டுவதாய் அமைதல் வேண்டும்” என்ற மாமேதை லெனின் கூற்றுக்கு இல‌க்க‌ண‌மாக‌ ப‌டைப்புக‌ளை வ‌ழ‌ங்கியவ‌ர் ப‌ட்டுக்கோட்டையார்.

(பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் நினைவு   நாள் அக்டோபர் 8)